சென்னை: தாயை அடித்து உதைத்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
சென்னை: தாயை அடித்து,உதைத்த தந்தையின் கொடுமை தாங்காமல் பெற்ற மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேளம்பாக்கம் அடுத்த நல்லம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் . இவரது மனைவி மகாலட்சுமி , இவர்களுக்கு கணேசன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
அங்குள்ள கல்குவாரியில் மெய்யப்பன் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கணேசன் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். புவனேஸ்வரிக்கு திருமணமாகி, செங்குன்றத்தில் வசிக்கிறார்.
மெய்யப்பனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. வேலை முடிந்து தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார். போதையில் மனைவியை அடித்து உதைப்பாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல மெய்யப்பன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். மகாலட்சுமியை அடித்து உதைத்துள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த கணேசன், தினமும் குடித்து விட்டு வந்து அம்மாவை அடித்து உதைக்கிறாயே, நியாயமா என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் மெய்யப்பன், வீட்டுக்கு வெளியே போட்டிருந்த கட்டிலில் படுத்து தூங்கினார்.
தினமும் தாயை அடித்து உதைப்பதால் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த கணேசன், நள்ளிரவில் அரிவாளை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த மெய்யப்பன் தலை, முகம், கை, கால் என 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.