கொளுந்தியாளைக் கட்டிக் கொடுங்க... மாமியார் சேலையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த மருமகன்!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கொளுந்தியாளைக் கட்டி வைக்கக் கூறி, மாமியாரின் சேலையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த மருமகன் கைது செய்யப்படடார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில், மனைவியை இழந்த கணவர், தனது கொளுந்தியாளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி மாமியாரின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை பகுதியைச் சேர்ந்தவர் ஷாபி மெர்ஷினா. 26 வயதான இவரை மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த டார்வின் என்பவருக்குக் கட்டிக் கொடுத்தனர். 3 வருடத்திற்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி மெர்ஷினா இறந்து விட்டார்.

இந்த நிலையில் மெர்ஷினாவின் தங்கையான கல்லூரி உதவிப் பேராசிரியை ஷாஜி மேகலாவை தனக்குக் கட்டிக் கொடுக்குமாறு அவரது தாயர் ஆல்பியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இருந்தாலும் விடாமல் தொடர்ந்து கேட்டு வந்தார் டார்வின்.
மேலும் மேகலா கல்லூரிக்குப் போகும்போதும் வரும்போதும் அவரையும் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார் மேகலா. இதனால் கோபம் கொண்ட ஆல்பி, டார்வின் வீட்டுக்கு வந்தார். எனது மகளை இனியும் தொந்தரவு செய்யக கூடாது என்று கூறி எச்சரித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அந்த சமயத்தில் திடீரென ஆல்பியின் சேலையைப் பிடித்து இழுத்து கோபமாக பேசினார் டார்வின். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆல்பி அவரிடமிருந்து விடுபட்டு வெளியே வந்து விட்டார். அப்படியும் கோபம் தணியாத டார்வின், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு வெளியேறினார்.
தனது தாயாருக்கு நேர்ந்த கதியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மேகலா, இனியும் அமைதியாக இருந்தால் பிரச்சினை பெரிதாகும் என்று கருதி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அநாகரீகமாக நடந்து கொண்ட டார்வினைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications