"வீட்டை விற்று பைக் வாங்கி கொடு".. மறுத்த தந்தையை கத்தரிக்கோலால் குத்திய கொடூர மகன்
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு அந்த தொகையை தனக்கு தர வேண்டும் என தந்தை ஆதிமூலத்திடம் மகன் வெற்றிச்செல்வன் வற்புறுத்தி வந்திருக்கிறார்.
திருப்பத்தூர்: தனக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை கத்தரிக்கோலால் 14 இடங்களில் குத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, தந்தையை குத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இல்லை என்று சொல்லுங்கள்..
சில பெற்றோரை நாம் பார்த்திருப்போம். தங்களிடம் பணம் இருந்த போதிலும், குழந்தைகள் கேட்பதை உடனே வாங்கி தந்துவிட மாட்டார்கள். குழந்தை பருவத்திலேயே, கேட்டது அனைத்தும் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை குழந்தைக்கு விதைக்கக் கூடாது என்பதே அதற்கு காரணம். பெரியவர் ஆன பிறகு, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், சில பெற்றோரோ, தங்கள் குழந்தை எந்தப் பொருளை கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்து விடுவார்கள். தங்கள் பிள்ளையிடம் இல்லை என்று சொல்லிவிடவே கூடாது என்ற லட்சியத்துடன் அவர்கள் இருப்பார்கள்.

தையல் கடைக்காரர்
இதில் இரண்டாவது ரகம் மிகவும் ஆபத்தானது. எது கேட்டாலும் தங்களுக்கு கிடைக்கும் என்ற சூழலில் வளரும் பிள்ளையால், பிற்காலத்தில் தாங்கள் ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் விரக்தி ஆகிவிடுவார்கள். அந்த விரக்தி அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும். அப்படியொரு சம்பவம்தான் திருப்பத்தூரில் நடந்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள கசியநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (62). தையல் கடை வைத்திருக்கிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் (36) என்ற மகன் இருக்கிறார்.

"வீட்டை விற்று பணம் தாருங்கள்"
வெற்றிச்செல்வன் சிஏ படிப்பு முடித்துவிட்டு, சென்னையில் உள்ள ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக இருந்து வருகிறார். ஆதிமூலத்திற்கு சென்னையில் சொந்தமாக ஒரு சிறிய வீடு உள்ளது. இதனிடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே சென்னையில் உள்ள வீட்டை விற்றுவிட்டு அந்த தொகையை தனக்கு தர வேண்டும் என தந்தை ஆதிமூலத்திடம் மகன் வெற்றிச்செல்வன் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், ஆதிமூலம் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருப்பத்தூர் வரும் போதெல்லாம் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார் வெற்றிச்செல்வன்.

தந்தைக்கு சரமாரி குத்து
இந்நிலையில், தனது தந்தையின் தையல் கடைக்கு நேற்று முன்தினம் சென்ற வெற்றிச்செல்வன், சென்னையில் உள்ள வீட்டைவிற்று எனக்கு பணம் தாருங்கள் அல்லது விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கித் தாருங்கள் என கேட்டுள்ளார். அப்போது வழக்கம் போல ஆதிமூலம், "உன் இஷ்டப்படியெல்லாம் நாங்கள் செய்ய முடியாது" எனக் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தந்தை ஆதிமூலத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். இதில் 14 இடங்களில் குத்தப்பட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்த ஆதிமூலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வெளியூர் தப்ப முயன்ற வெற்றிச்செல்வனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications