'ஸ்டண்ட் நடிகர்' விஜயகாந்த் பிடிகொடுக்கவில்லை; சோனியா- கனிமொழி சந்திப்பில் அரசியல் இல்லை: கருணாநிதி
திருச்சி: ஸ்டண்ட் நடிகர் என்பதால் எதிரிகளுக்கு பிடி கொடுக்காமல் இருப்பது போல் விஜயகாந்த்தும், கூட்டணி அழைப்பிற்கு பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகவே தமது மகளும் எம்.பியுமான கனிமொழி சந்தித்தார் என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் திமுகவின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு திருச்சி சென்றடைந்தார்.
இன்று காலை மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் மாநாட்டு வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி தெரிவித்த பதில்களின் தொகுப்பு:

பிடிகொடுக்காத ஸ்டண்ட் நடிகர் விஜயகாந்த்
கேள்வி: தே.மு.தி.க. வை நீங்கள் இரண்டு முறை அழைத்தும் கூட -- வந்தால் வரவேற்போம் என்று சொல்லியும் கூட இது வரை அவர்கள் பிடி கொடுக்காமல் நடக்கிறார்கள். தி.மு. கழகம் பெரிய கட்சி. எல்லா கட்சிகளுமே தி.மு.கழகத்துடன் கூட்டணி சேர விரும்பு வார்கள். விஜயகாந்தின் தயக்கத்திற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கருணாநிதி: விஜயகாந்த் நல்ல "ஸ்டண்ட்" நடிகர். அவர் பிடி கொடுக்காமல் இருக்கிறார் என்பதிலிருந்து, ஸ்டண்ட் நடிகராக இருக்கிற போது எப்படி எதிரிகளுக்குப் பிடி கொடுக்காமல் நடிப்பாரோ, அதைப் போல இப்பொழுதும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். நீங்கள் கேட்டது போல அவரும், அவருடைய கட்சியும் தி.மு.க. கூட்டணியோடு இருக்க வேண்டுமென்ற விருப்பத்தை நான் இரண்டொரு முறை குறிப்பிட்டிருக்கிறேன்.

விஜயகாந்த் விதி விலக்கு அல்ல
தமிழ்நாட்டு மக்களை இன உணர்வோடும், ஒற்றுமையோடும், வாழ வைக்க வேண்டுமென்ற அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கள் அணிக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு விஜயகாந்த் விதிவிலக்கு அல்ல.

காங். கூட்டணி பற்றி விவாதிக்கவில்லை
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நீங்கள் வெளியே வந்த பிறகு பரூக் அப்துல்லா போன்ற தலைவர்கள் எல்லாம் உங்களை வந்து சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தி.மு.க. விற்கு காங்கிரசுடன் மீண்டும் இணைவதற்கு தயக்கம் இருக்கிறதா?
கருணாநிதி: பரூக் அப்துல்லா மற்றும் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் எனக்கு ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள். அதையொட்டி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது நட்பு முறையில் என்னைச் சந்தித்தார்கள். இதுவரையில் என்னைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்களோ அல்லது வட நாட்டிலிருந்து வந்த தலைவர்களோ தேர்தல் கூட்டணி பற்றி என்னிடம் விவாதிக்க வில்லை.

சோனியாவுடன் கனிமொழி சந்திப்பு
கேள்வி: மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சோனியாவைச் சந்தித்ததில் முக்கியத்துவம் உண்டா? கூட்டணியில் மாற்றம் வருமா?
கருணாநிதி: கனிமொழிக்கு உடல் நலக் குறைவு என்று திடீரென்று நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அதைப் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தி வெளியிட்டார்கள். அதுகுறித்து தெரிந்து கொள்ள சோனியா காந்தி விரும்பினார். அதனால் தான் மாநிலங்களவையிலே கலந்து கொள்வதற்காக டெல்லிக்குச் சென்ற கனிமொழி, சோனியா காந்தியைச் சந்தித்து, தான் உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவித்து திரும்பினார். அதைத் தவிர, இதில் வேறொன்றும் அரசியல் இல்லை.

மத்தியில் யார் ஆட்சி?
கேள்வி: இதுவரை இரண்டு மூன்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. அதில் வருகின்ற தேர்தலில் பா.ஜ.க. தான் அதிக இடங்களைப் பெறும் என்று கணித்திருக்கிறார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பார்லி.யில் மிளகு பொடி வீச்சு
கருணாநிதி: மக்களின் எண்ண மாறுதல்கள் அடிப்படையில் அணிகள் மாறுவதும், அதன் காரணமாக ஆட்சி மாறுவதும் நடைபெறுகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. நான் திட்டவட்ட மாக எந்தகட்சி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்று சொல்ல முடியாது; சொல்லவும் விரும்பவில்லை.
கேள்வி: தெலுங்கானா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மிளகு பொடியைத் துhக்கி வீசியிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
கருணாநிதி: பொதுவாக கடந்த சில ஆண்டுக் காலமாக நாடாளுமன்றத்தில்; ஜனநாயகத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பிலே உள்ள உறுப்பினர்களாலேயே ஜனநாயகம் பாழ்படுத்தப்படுகிறது என்பதை மிகுந்த வருத்தத்தோடு நான் குறிப்பிட வேண்டியவனாக இருக்கிறேன்.

சந்தர்ப்பவாத அடிமைத்தனம்
கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா மீது பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முதல் அமைச்சரைப் போய்ப் பார்த்து விட்டு வந்து, "ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு தகுதியானவர்"" என்று சொல்கிறார்களே, இது "சந்தர்ப்ப வாத அரசியலா? அல்லது அரசியல் அடிமைத்தனம்"" என்று நினைக்கிறீர்களா?
கருணாநிதி: உங்களுடைய கேள்வியின் கடைசிப் பகுதியை பதிலாகப் போட்டுக் கொள்ள வேண்டுகிறேன். (சந்தர்ப்பவாத அடிமைத்தனம்)

என் உயரம் எனக்கு தெரியும்..
கேள்வி : மூன்றாவது அணியிலே இருக்கிற முக்கிய தலைவர் கள் எல்லாம் பிரதமராக ஆக வேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள். நீங்கள் தமிழகத்தின் முக்கிய தலைவர். உங்களுக்கு பிரதமராக வேண்டுமென்ற ஆசை இருக்கிறதா?
கருணாநிதி: எனக்கா? என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்.
கேள்வி : பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. எதை மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்யும்?
கருணாநிதி: இந்திய நாட்டின் ஒற்றுமையை - மதவாதமற்ற தன்மையை - ஊழலற்ற நிர்வாகத்தை - மற்றவர்களை மதித்து அரசியல் நடத்துகின்ற அண்ணாவின் கொள்கையை மையமாக வைத்து நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு அடுத்துவரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் - தேர்தலில் மாத்திர மல்ல; எங்கள் கழகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் கடைப் பிடிப்போம்.

3வது பற்றி கருத்து இல்லை
கேள்வி: மூன்றாவது அணியின் முயற்சி இந்த முறையாவது வெற்றி பெறுமா? மோடி கூறும்போது மூன்றாவது அணி காங்கிர சுக்குத் தான் பயன்படும் என்று அலறுகிறாரே? தங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: நான் அதைப் பற்றி யெல்லாம் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கு
கேள்வி: தெரிந்தோ தெரியாமலோ 2 ஜி பற்றி ஒரு குற்றச் சாட்டு உங்கள் மீது இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அதை எப்படி முறியடிக்கப் போகிறீர்கள்?
கருணாநிதி: 2 ஜி குற்றச்சாட்டு, ராஜா மீதோ அல்லது வேறு யார் மீதோ கூறப்பட்டிருந்தாலும், அப்பொழுது பூதாகாரமாக பத்திரிகைகளிலே வெளியிடப்பட்ட - கொட்டையெழுத்துக்களில் வெளியிடப் பட்ட 80 ஆயிரம் கோடி, 90 ஆயிரம் கோடி என்ற தொகை யெல்லாம் வந்தது. வெடித்த பலூனைப் போல, இப்போது சுருங்கி கேள்விக் குறியாக ஆகி விட்டிருக்கிறது.

பொருளாதார வீழ்ச்சி
கேள்வி :- 2010-2011ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சியில் 14 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 4 சதவிகித மாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: 2014-2015ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை பற்றிய என்னுடைய கருத்தினை தனியாக அறிக்கையாகக் கொடுத்திருக்கிறேன். அதிலே இதற்கு விளக்கம் அளித்திருக்கிறேன். இப்போது தமிழகத்திலே பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகக் கவலைக்கிடமான முறையில் அமைந்திருக் கிறது என்பதையும் நான் எடுத்துக் காட்டியுள்ள புள்ளி விவரங்களின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஐந்தாவது மாநாடு..
கேள்வி : நீங்கள் தலைமையேற்று கலந்து கொள்ளும் ஐந்தாவது மாநாடு இது. உங்கள் மன நிலைமை எவ்வாறு இருக்கிறது?
கருணாநிதி:- மாநில மாநாட்டிற்கு நான் தலைமையேற்பது இது ஆறாவது முறை. என்னுடைய மன நிலைமை பற்றி தலைமை உரையில் சொல்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications