ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான்.. நாஞ்சில் சம்பத் ஆவேசம்
சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் மத்திய அரசுக்கும் ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video

நாகர்கோவில் : ஆரல்வாய்மொழியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத், சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு தான் விரைவில் மத்திய அரசுக்கு ஏற்படும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் டி.டி.வி தினகரன் அணியினரும் அதற்கு போட்டியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் நூற்றாண்டு விழா நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத், திராவிட இயக்கத்தை வீழ்த்த சினிமா பிரபலங்களை அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். அதற்கு தெரிந்தோ, தெரியாமலோ மோடி அரசு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
இளைஞர்களை வசீகரிக்கும் தலைவராக டி.டி.வி தினகரன் இருக்கிறார். நேதாஜி, அண்ணாவுக்கு கிடைக்காத இளைஞர் படை இன்று தினகரனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் நம்பிக்கையாக தினகரன் இருக்கிறார்.
தமிழக அரசின் ஆட்சி இன்று நீதிமன்ற படிக்கட்டில் குற்றுயிராக கிடக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் முடியலாம். மந்திரிகள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு ஆதரவு இல்லை. துரோகத்திற்கு நீண்டநாள் விளம்பரம் கிடைக்காது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று தினகரன் சொன்னார் அதன்படி ஜெயித்துக்காட்டினார். சின்னத்தை முடக்கினாலும் அவர் வென்றுகாட்டினார். வெற்றிக்கு சின்னம் முக்கியம் அல்ல; செல்வாக்குதான் முக்கியம்.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் மத்திய அரசுக்கு ஏற்படும். எத்தனை ஆபத்து வந்தாலும் அதை எதிர்கொள்வோம். எங்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டு உள்ளது. ஆனால், அதை நாங்கள் முறியடித்து விரைவில் வெற்றி பெறுவோம்.
ஹஜ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்த அறிவிப்பை அதே சமூகத்தை சேர்ந்த மந்திரி மூலமே அறிவிக்க செய்தது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள 25 கோடி சிறுபான்மை மக்கள் இன்று அச்சத்தின் பிடியில் உள்ளனர்.
கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலை தள்ளாடுகிறது. ஆனால் இதை எல்லாம் எதிர்த்து யாரும் பேச முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விரைவில் இந்த நிலை மாறும் என்று நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications