காற்று மேலடுக்கு சுழற்சி கேரளாவில் மையம்: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! சென்னை எஸ்கேப்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களை வாட்டி வந்த மழைக்கு காரணமான காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுகுறைந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டதால் இனி மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, நேற்று முன்தினம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த தாழ்வு மண்டலத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே சென்னை, கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டி வந்தது.

தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடக்கு உள் மாவட்டங்களில் மழை அதிகரித்தது. பெங்களூரிலும் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இதனால் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மழை பெரும் இடையூறாக இருந்தது.
நேற்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வேலூரில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால் இன்று காலை வரை பெங்களூர் மற்றும் வட தமிழ்நாட்டில் மழை பெய்தபடி இருந்தது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை இருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது: வேலூரில் இருந்து 60 கி. மீ தொலைவில் நேற்று காலை முதல் காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வந்தது. அது வலுவிழந்து, காற்று மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.
அந்த காற்று சுழற்சி தற்போது கேரளாவில் நிலை கொண்டுள்ளது. அது அப்படியே அரபிக்கடல் வழியாக, ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயரும் வாய்ப்புள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் மழை குறைந்து, வானம் தெளிவாக காணப்படும். சென்னையிலும் வானம் தெளிவாக இருக்கும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். இவ்வாறு ரமணன் கூறினார்.












Click it and Unblock the Notifications