சென்னையில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்... அச்சத்தில் பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் பயந்து போய் வெளிமாநிலங்களுக்கு ஓடிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா பெருமையுடன் சொன்னார்.

ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2014 ஆகஸ்ட் 20ஆம் தேதிவரை தினந்தோறும் நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 2011ஆம் மே மாதம் 24 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏவின் வீடு புகுந்து பட்டப்பகலில் அவரது மனைவியிடம் இருந்து நகையைப் பறித்துச் சென்று அதிரவைத்தனர் கொள்ளையர்கள்.

Gold

நேற்று முன்தினம் திருத்தணி அருகே மின்சார ரயிலில் பயணம் செய்த இரண்டு பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 50 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இவற்றைப் பார்க்கும் போது ஆந்திராவுக்கு தப்பி ஓடிய கொள்ளையர்கள் எல்லாம் திரும்பி வந்துவிட்டார்களா என்று கேட்கின்றனர் எதிர்கட்சியினரும், மக்களும்.

ஒரேநாளில் 9 சம்பவங்கள்

தலைநகர் சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக கடந்த ஜூலை 26-ம் தேதி மட்டும் சென்னையில் சாலைகளில் நடந்துச் சென்ற 9 பேரிடம் வழிப்பறிக்கொள்ளையர்கள் அடுத்தடுத்து நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

5 சவரன் நகை

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்லத்துரையின் மனைவி கிருஷ்ணவேணி (46). இவர், அயனாவரம் ரயில்நிலையம் அருகே நேற்று காலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

பால்வாங்க சென்ற போது

அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் மனைவி ரதி. இவர் அதிகாலையில் பால் வாங்க சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க சங்கலியை பறித்துச் சென்றனர்.

நடைபயிற்சி

அதே பகுதியில் உள்ள முத்தம்மன் தெருவை சேர்ந்த மாணிக்கம்மாள் (59) என்பவர் அதிகாலையில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க சங்கலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த மாணிக்கம் (46) என்பவரிடம் இருந்தும் 4 சவரன் தங்க சங்கலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

அண்ணா நகரில் 20 பவுன்

அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஜோதியிடம் இருந்து 15 சவரன் தங்க சங்கலிகளை பறித்துச் சென்றனர். அண்ணாநகர் ‘எப்' பிளாக்கை சேர்ந்தவர் சுஜாதாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

பேருந்து நிலையத்தில்

அம்பத்தூரில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் புவனேஸ்வரி (26) பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த கொள்ளையர்கள், புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க சங்கலியை பறித்துச் சென்றனர்.

9 பவுன் அபேஸ்

இதுபோல, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீபதி என்பவரின் மனைவி ஹேமாவதி (63 காலையில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் கிடந்த 9 சவரன் தங்க சங்கலியை மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுபோல வேப்பேரியிலும் ஒரு செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

தொடர் நகைப் பறிப்பு

அயனாவரம், அண்ணாநகர் பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே, ஒரே கொள்ளை கும்பல்தான், இந்த பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இதில், நான்கு வட மாநில கொள்ளையர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்

வடமாநில கொள்ளையர்கள்

'அண்ணாநகரில் குறிப்பிட்ட சில நிமிட இடைவெளியில் மூன்று சம்பவங்கள் நடந்ததால் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்த போலீசார் அப்போது பல்சர், கரிஷ்மா ஆகிய பைக்குகளில் அந்த இடங்களில் குறுந்தாடியுடன் இருவர் செயினைப் பறித்துச் செல்வது தெரிந்தது.

அந்த பைக்குகளில் மத்தியப்பிரதேச வாகன பதிவு எண்கள் இருந்தன. இதுதான் போலீசாருக்கு இந்த வழக்கில் கிடைத்த முக்கியமான தடயம்.

தேடுதல் வேட்டை

இதை வைத்து தனிப்படை போலீசார் சென்னையில் உள்ள வாகனம் நிறுத்து மிடங்களில் விசாரணை நடத்தினார்கள். அப்போது பேசின் பாலம் ரயில் நிலைய வாகனக் காப்பகத்தில், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பைக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பைக்கில் ஜெர்க்கின் மற்றும் அறுந்த நிலையில் தாலிக்கயிறு ஆகியவை இருந்தது. உடனடியாக அந்த பைக்கின் உரிமையாளர் குறித்து விசாரித்தனர்.

தீவிர கண்காணிப்பு

கடந்த 2-ம் தேதி வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் அந்த பைக்கை எடுத்தார்கள். அவர்களிடம் இந்தியில் விசாரித்தபோது, அவர்களில் ஒருவன் மத்தியப்பிரதேசம், போபாலை சேர்ந்த மூர்த்தஜா அலி என்பதும் இன்னொருவன் கர்நாடக மாநிலம், பிதார் மாவட்டத்தைச் சேர்ந்த சர்தாஜ் அலி என்பதும் தெரிந்தது.

4 கொள்ளையர்கள் கைது

இதில் மூர்த்தஜா இந்தக் கூட்டத்தின் தலைவன். இதனையடுத்து தனிப்படையினர், போபாலைச் சேர்ந்த அர்சன் அலி, சுனில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கொள்ளையர்கள் மீது கோவை, போபால், கர்நாடகா ஆகிய இடங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

விமானத்தில் வந்து நகைபறிப்பு

ஒவ்வொரு சனிக்கிழமையும் வட மாநிலத்திலிருந்து ரயில் அல்லது விமானத்தில் வந்திறங்கும் இந்தக் கொள்ளையர்கள், சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு அன்றைய தினமே தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

தினசரி 50 பவுன் பறிப்பு

'வட மாநிலங்களில் பெண்கள் யாரும் தங்க நகைகள் அணிவது கிடையாது. ஆனால், சென்னையில் பெண்களின் கழுத்தில் குறைந்தது இரண்டு சவரன் தாலிச் செயின் இருக்கும் என்பதை இந்தக் கொள்ளையர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இவர்கள் சென்னையில் ஒரு தடவை செயின் பறிப்பில் ஈடுபட்டால் குறைந்தது 50 சவரன் கிடைக்குமாம்.

நகை பறித்த மாணவர்கள்

வடமாநில கொள்ளையர்கள் விமானத்தில் வந்து நகைபறித்தால், சென்னையில் படிக்கும் மாணவர்கள் நெல்லைக்கு ரயிலில் போய் நகையை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 சவரன் நகைகள்

விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து 4 ஆண்டுகளாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பட்டதாரி மாணவர்களில் ஒருவனை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 200 சவரன் வரை திருடியது தெரியவந்துள்ளது.

சிவப்பு மோட்டார் சைக்கிள்

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து 2 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிவப்பு வண்ண மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.

பிடிபட்ட திருடர்கள்

மாநகரிலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே சிவப்பு வண்ண மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களை போலீசார் நிறுத்தினர். பின்புறம் இருந்தவர் இறங்கி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் பிடிபட்டார். அவரிடம் 17 சவரன் நகைகள், ரயில் டிக்கெட் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

பொறியியல் பட்டதாரி

இவர் சென்னை, தாம்பரம், முத்தமிழ்நகர் 3-வது தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் சீனிவாசன் (21). எம்.ஏ. பட்டதாரி. தப்பி ஓடியவர் சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த எல்ராயன் (23). பொறியியல் பட்டதாரி. இவர்கள் சென்னையிலிருந்து வார இறுதி நாள்களில் திருநெல்வேலிக்கு ரயிலில் வந்துவிடுவர்.

விடுதியில் அறை

திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, சிவப்பு வண்ணத்திலான மோட்டார் சைக்கிளில் மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் செல்வர். தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர்.

ரயிலில் தப்பும் திருடர்கள்

இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளாக திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுவரை 200 சவரன் நகைகள் வரை திருடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெண்களிடம் நகைகளை பறித்துவிட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். நகை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோதுதான் சீனிவாசன் பிடிபட்டுள்ளார். தப்பி யோடிய எல்ராயனை போலீஸார் தேடிவருகின்றனர்.

உல்லாச செலவிற்கு

வானம் திரைப்படத்தில் ஸ்டார் ஹோட்டல் விருந்தில் காதலியுடன் பங்கேற்கவேண்டும் என்பதற்கான நகைபறிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் சிம்பு, அதுமுடியாமல் போகவே பணத்தை கொள்ளையடிப்பார். இதுபோன்ற உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதான் ஏராளமான கல்லூரிமாணவர்கள் இதுபோன்ற வழிப்பறி செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+