எனக்கு வருத்தம்ப்பா.. ஏன் இப்படி செஞ்சீங்கனு ஒரு வார்த்தை கேட்டாரா? எடப்பாடி செயலால் சபாநாயகர் கோபம்
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், "அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு சற்று கோபமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து போகாமல் கவனித்ததைச் சுட்டிக்காட்டி, அதிமுகவினரை விமர்சித்தார் சபாநாயகர் அப்பாவு.

சட்டசபை விவாதம் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் ஐபிஎஸ், கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசத் தொடங்கினார். முதல்வர் பதிலுரையின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுகவினருக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக வெளிநடப்பு : இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற உரையை நேரலை செய்யாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கு சபாநாயகர் அப்பாவு வருத்தம் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதலமைச்சர் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் கோபம் : இப்படி ஏன் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட செல்லாமல் இருக்கக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர். அவையை விட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications