இலங்கை மன்னிப்பு கேட்டு விட்டதால் சட்டசபையில் விவாதம் தேவையில்லை - சபாநாயகர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா குறித்த அவதூறான கட்டுரை மற்றும் படத்துக்காக இலங்கை அரசு மன்னிப்பு கேட்டு விட்டதால் அதுகுறித்து சட்டசபையில்விவாதிக்க வேண்டியது இல்லை என்று தமிழக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சர்ச்சை வெடித்த அன்றே சட்டசபையில் விவாதம் நடத்த மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை கோரின. ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இன்றும் கூட பல கட்சிகள் இதற்குக் கோரிக்கை விடுத்தன.
ஆனால் இன்றும் சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதுகுறித்து அவர் உறுப்பினர்களிடையே விளக்குகையில், இலங்கை அரசின் அவதூறு செய்திக்கு முதல்வரின் பின் நின்று அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பணிந்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. எனவே அந்த பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் தேவை இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அதிமுக அமளி
அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அதிமுக உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டு அவைகளை ஸ்தம்பிக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications