கூவத்தூர் ரிசார்ட் பற்றி பேச ஓபிஎஸ் அணியினருக்கு சட்டசபையில் அனுமதி மறுப்பு
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பற்றி பேச சட்டசபையில் சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை சட்டசபையில் பேசியதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுத்து தீர்மானத்தை முன் மொழிந்து தனது பலத்தை நிரூபிக்கக் காத்திருக்கிறார். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டசபையில் பேசி வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.
இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை, கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது குறித்து பேசினார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார். மேலும் வெளியில் நடந்த விஷயங்கள் குறித்து அவையில் பேச அனுமதி இல்லை என்று கூறியதோடு கூவத்தூர் குறித்து செம்மலை பேசிய பேச்சையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.