தீபாவளிக்கு 11,959 சிறப்புப் பேருந்துகள்.. அறிவித்தார் ஜெயலலிதா
சென்னை: தீபாவளியையொட்டி தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 11959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றனர். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் செல்வது வழக்கம்.
இவர்கள் பெரும்பாலும் ரயில்களை முதலில் நாடுவர். அதில் இடம் இல்லாவிட்டால் அரசுப் பேருந்துகளையும், ஆம்னி பேருந்துகளையும் நாடுவர்.
காலி இடங்கள் இல்லை:
வழக்கமான ரயில்கள் அனைத்திலும் தீபாவளிக்கு முன்னதான நாட்களில் இடங்கள் காலி இல்லை. சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளன. அவற்றிலும் இடங்கள் நிரம்பி வருகின்றன.
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு:
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா சிறப்புப் பேரு்நதுகளை அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 11,959 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முக்கிய ஊர்களுக்கு இயக்கம்:
கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்டங்களின் தலைநகர்களுக்கும், முக்கிய ஊர்களுக்கும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இயங்கும் நாட்கள்:
நவம்பர் 6 முதல் 9 ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து 4,271 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி 1,106 பேருந்துகளும், நவம்பர் 7-ம் தேதி 1,146 பேருந்துகளும், நவம்பர் 8-ம் தேதி 825 பேருந்துகளும், நவம்பர் 9-ம் தேதி 1,194 பேருந்துகளும் இயக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தீபாவளி முடிந்தும் உண்டு:
இது தவிர மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து நவம்பர் 6ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 7,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா. தீபாவளி பண்டிகை முடிந்து பணியிடம் திரும்ப நவம்பர் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கணிசமான அளவில் இயக்கம்:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையம் அமைக்கப்படும் என்றும், சென்னையில் கணிசமான அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.