'அம்மா'வுக்காக செங்கோட்டை ஆலயங்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
தென்காசி: முதல்வர் ஜெயலலிதா குணமடைய அதிமுகவினர் செங்கோட்டை பகுதி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மக்கள் பணியை மீண்டும் தொடர வேண்டி நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆலயங்களில் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பிரார்த்தனைகள், பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செங்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் புளியரை, பகவதிபுரம், கட்டளைக்குடியிருப்பு, தெற்குமேடு, அங்கன் காலடி, கற்குடி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றிய செயலாளர் செல்லப்பன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் தலைமையில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிசேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முதல்வர் குணமடைய வேண்டினர். இதே போன்று செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர்.

முன்னதாக தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications