ஓபிஎஸ் தம்பி ராஜா மீதான பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: அரசு சிறப்பு வக்கீல் திடீர் விலகல்!!
திண்டுக்கல்: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ. ராஜா மீதான பூசாரியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் இருந்து விலகுவதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி மோகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு தராததால் விலகுவதாகவும் பி. மோகன் குறிப்பிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார். அவர் 7.12.2012-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகரசபைத் தலைவருமான ஓ.ராஜா, பாண்டி உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.மோகனை நியமனம் செய்யக்கோரி பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர் மோகனை சிறப்பு வழக்கறிஞராக நியமனம் செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிப். 19-ந் தேதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.மோகன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் மோகன் ஒரு மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த வழக்கில் காவல்துறை போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை; ஆகையால் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அரசு சிறப்பு வழக்கறிஞரின் இந்த திடீர் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications