தீபாவளிக்கு நெல்லைக்கு செல்ல பகலில் சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தீபாவளிக்கு திருநெல்வேலிக்கு செல்லும் மக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே, பகலில் ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-சென்னை இடையே பகலிலும் ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் வரும் புதன்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதால், சென்னையில் இருந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழகம் நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தில் அலைமோதுகிறது. இரவு நேரத்தில் மட்டும் ஓரிரு ரயில்கள் இயக்கப்படுவதால் கடைசி நிமிடத்தில் ஊருக்குச் செல்கிறவர்கள் சிரமப்பட்டு, நெரிசலில் சிக்கித் தான் ஊருக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூர்-நெல்லை முன்பதிவு இல்லாத ரயில் எண் (06017) சென்னை எழும்பூரிலிருந்து 17ம் தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு நெல்லை சந்திப்பு வந்து சேரும். மெயின் லைன் வழியாக இயக்கப்படும் இந்த ரயிலில் 16 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, சிதம்பரம், வைத்திஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நெல்லைக்கு வரும்.
மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் எண் (06018) நெல்லையில் இருந்து 20ம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு அன்றிவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னையை அடையும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.