நெடுஞ்சாலைத் திட்டங்களை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்பி தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
விரிவான சாலை கட்டமைப்பு...
தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி செலவில் விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிதியை ஒதுக்குவதற்கான அரசாணை கடந்த 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பெரிய அளவிலான சாலைத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வரும் போதிலும், தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைகளின் நிலைமை, குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமை மோசமாக இருப்பது கவலையளிக்கிறது.
அரசு பராமரிப்பில்லை...
தமிழ்நாட்டில் மொத்தம் 4974 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 2250 கி.மீ. நீள சாலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன.
மத்திய அரசின் ஒதுக்கீடு...
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் பல்வேறு சாலைப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.514 கோடியை ஒதுக்கீடு செய்தது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையோ ரூ. 210 கோடி மதிப்புள்ளப் பணிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது.
காலிப்பணியிடம்...
ஆண்டு தோறும் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக நெடுஞ்சாலைத் துறையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவின் தலைமைப் பொறியாளர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் மேற்பார்வைப் பொறியாளர், துணைத் தலைமை பொறியாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்படாததால் நெடுஞ்சாலைப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன.
கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்...
தமிழகத்தில் ரூ.4641 கோடி மதிப்புள்ள 972.3 கி.மீ நீளம் 8 நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிப்படையாக குற்றஞ் சாட்டியிருந்தார். அதன் பிறகும் அத்திட்டப்பணிகளுக்கோ அல்லது மதுரவாயல்-சென்னை துறைமுகம் பறக்கும் பாலம் திட்டத்திற்கோ தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கியத் திட்டங்களையும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது.
நடவடிக்கை தேவை...
பொறுப்பான பதவிகளில் நேர்மையான அதிகாரிகளை அமர்த்தி, அவர்களை ஊக்குவித்தால் மட்டுமே நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியும். இல்லாவிட்டால் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.3000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாமல் போய்விடும், எனவே, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பி, அறிவிக்கப்பட்டுள்ள சாலைத் திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.