ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி… டிராபிக் ராமசாமி மீது புகார்
சென்னை: ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருவதாக டிராபிக் ராமசாமி மீது கே. சுவாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 23 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இதனையடுத்து, சென்னை போலீசார் முதல் கட்டமாக 43 வழக்குகளை பதிவு செய்ததோடு மென்பொருள் பொறியாளர்கள் 2 பேரை கைது செய்தது. 2ம் கட்டமாக நேற்று புதிதாக 9 வழக்குகளை பதிவு செய்த போலீசார் மேலும் 2 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கே. சுவாமி என்பவர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.