நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலை வெறி தாக்குதல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் இருந்த வளைகளை அறுத்தெறிந்து, கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் அச்சத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள், இந்திய எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்து உள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். அதை தொடர்ந்து மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு நஷ்டத்துடன் கரைக்கு திரும்பினர்.

இந்த தாக்குதல் குறித்து கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். பரம்பரியமான பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வலைளைகளை அறுத்து கடலில் வீசினர். நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாலே, இலங்கை கடற்படையினர் எங்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிறைபிடித்து சென்று இலங்கை சிறையில் அடைத்து விடுகின்றனர். இதனால், எங்கள் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
இதை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications