திருமலை திருப்பதி தேவஸ்தான டிவியில் தெலுங்கு பேசப்போகும் கலைஞரின் ஸ்ரீ ராமானுஜர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கை வண்ணத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜர் தொடர் தெலுங்கு பேசப் போகிறது. திருப்பதி தேவஸ்தான டிவியில் இந்த தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரி, திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். தெலுங்கு டப்பிங் உரிமையை இலவசமாக அளிக்க ஒப்புக்கொண்டுள்ளார் கருணாநிதி.
ஸ்ரீ ராமானுஜர் தமிழகத்தில் வைணவம் தழைத்தோங்க வைத்தவர். மடாலயங்களை ஏற்படுத்தி இறை பணியில் ஈடுபட்ட இவர், வைணவர்களின் தலைமை குருவாக வும் விளங்கியவர். இன்றைக்கும் ராமானுஜருக்கு பெருமாள் கோயில் களில் தனி சந்நிதியும் வழிபாடும் நடைபெறுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதிய முறையை ஒழித்திடும் விதமாக ஹரிஜன மக்கள் ஆலய பிரவேசம் செய்திட வழி வகை செய்து, புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களை பாமர மக்களிடையே பரப்பியவர். பக்தி இலக்கியங்களால் தமிழுக்குத் தொண்டாற்றிய ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு கலைஞர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மதத்தில் புரட்சி செய்த மகான்
கருணாநிதியின் கை வண்ணத்தில் உருவான ராமானுஜர் காவியம் 125 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிவிட்டது.
ஒவ்வொரு எபிசோடும் சுவாரஸ்யங்களுடன் செல்கிறது. மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தன்னுடைய பாணியில் அழகான வசனங்களுடன் கூறி வருகிறார் கலைஞர் கருணாநிதி.
தெலுங்கு டப்பிங்
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் தெலுங்கில் டப்பிங் செய்து ஒளிபரப்ப அனுமதி வேண்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகள் தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர்.
கருணாநிதியுடன் சந்திப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டர் உள்ளிட்டவைகளை கருணாநிதிக்கு பரிசளித்த அவர்கள், ஸ்ரீராமானுஜரின் காவியத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய அனுமதி கோரினர். அதற்கு சம்மதம் தெரிவித்த கருணாநிதி, ராமானுஜர் தெலுங்கு டப்பிங் உரிமையை இலவசமாக கொடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி அனந்தகுமார், ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றினை நல்ல முறையில் டப்பிங் செய்து, அவரின் வாழ்க்கை வரலாறு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பார்க்கும் வகையில் கொண்டு சேர்ப்போம் என்று தெரிவித்தார்.
ராமானுஜரின் பயணம்
பகவான் கண்ணன் கீதையில் சொன்ன சரணாகதித் தத்துவத்தை மேலும் விரிவுபடுத்தியும், நம்மாழ்வாரின் திருவாய்மொழிக் கருத்துக்களை உள்ளடிக்கி விசிஷ்டாத்துவைதம் எனும் கோட்பாட்டை உருவாக்கிய ஸ்ரீபாஷ்யகாரரான ராமானுஜர் பாரதத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் விஸ்தாரமாக பயணம் செய்தவர்.
திருப்பதியில் ராமானுஜர்
ராமானுஜரின் ஆளுகை மிகப் பிரபலமானது திருப்பதியில்தான் . ‘வைணவர்களின் ரட்சை திருமலை' என்றே எழுதிவைத்தது கூட உண்டு.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பான செயல் ஒன்று ஆந்திரத்தில் இவர் பெயரால் செய்யப்பட்டு வருகிறது. சாதிகளை ஒன்றாக்கியவர் உடையவர்.
ராமானுஜர் பெயரில் மடங்கள்
இப்போதும் ராமானுஜர் பெயரால் ஊரெங்கும் மடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவைகளை ராமானுஜ கூடம் என்றே அழைக்கின்றனர். அங்கே திருவாய்மொழிக்கும், திருப்பாவைக்கும்தான் முதலிடம். இந்த கூடங்களை நிர்வாகம் செய்து மிகச் சீரிய முறையில் சேவை செய்து வருகின்றனர்.
ஆந்திராவில் ராமானுஜர்
ஆந்திராவில் உள்ள மக்கள் ராமானுஜரை நன்கு அறிவார்கள். திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருமலை ஏழுமலையான் ஆலயத்திலும் ராமானுஜருக்கு தனி சன்னதி உண்டு. இன்றைக்கும் ராமானுஜரின் உற்சவ சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. எனவேதான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றினை தெலுங்கில் டப்பிங் செய்ய முடிவெடுத்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சி.