அதிமுகவால் ஸ்ரீதர் வாண்டையாருக்கு தர்ம சங்கடம்
சென்னை: மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா, சிவகங்கை தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதா என்ற, குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் உறவினர் ஸ்ரீதர் வாண்டையார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
பல தேர்தல்களில், அதிமுகவுக்கு ஆதரவாக வாண்டையார் பிரசாரம் செய்து வந்தார். 2011 சட்டசபை தேர்தலில், தனது கட்சிக்கு அதிமுக சீட் தராததால், திமுக கூட்டணியில் இணைந்து, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட வாண்டையார் வெறும், 2,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திமுகவினர் மீது புகார்
திமுகவினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதே தோல்விக்கு காரணம் என்று உள்ளூர் நிர்வாகிகள் மீது, அக்கட்சி தலைமையிடம் புகார் செய்தும், தலைமை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

லோக்சபா தேர்தல்
இதற்கிடையில், 2014 லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்த வாண்டையார், ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக வெற்றி பெற்றது. அதே மகிழ்ச்சியில், வரும் சட்டசபை தேர்தலில், தனது கட்சிக்கு தொகுதி ஒதுக்கும்படி, ஜெயலலிதாவை சந்தித்து கடிதம் கொடுத்தார் வாண்டையார்.

தனித்து போட்டி
ஆனால், வாண்டையார் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த ஸ்ரீதர் வாண்டையார், சிவகங்கை தொகுதியில் தனித்து போட்டியிட முடிவு செய்து, அங்கு முகாமிட்டுள்ளார்.

குழப்பம்
இந்நிலையில், அதிமுக தலைமை உத்தரவின்படி, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் தலைமையில், அதிமுக வேட்பாளர்கள் சிலர் கவரப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதர் வாண்டையார் வீட்டுக்கு சென்று, ஆதரவு கேட்டதோடு, கட்சி தலைமை கூறிய தகவலையும் தெரிவித்தனர். எனவே ஸ்ரீதர் வாண்டையார், தற்போது சிவகங்கை தொகுதியில் தனித்து போட்டியிடலாமா அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா என்ற இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications