தமிழக மீனவர்கள் 40 பேரை விடுதலை செய்தன இலங்கை நீதிமன்றங்கள்... விசைப்படகுகளை விடுவிக்க மறுப்பு
கொழும்பு : இலங்கைச் சிறைகளிலிருந்த 40 தமிழக மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றங்கள் திங்கட்கிழமை விடுதலை செய்து உத்திரவிட்டுள்ளன.
கடந்த ஜுன் மாதம் 4 ஆம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி 3 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்து 14 ராமேசுவரம் மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் 6 முறை காவல் நீட்டிக்கப்பட்டு அடைக்கப்பட்டனர்.
அது போல கடந்த ஜுன் 21 அன்று நாகை அக்கரைப் பேட்டையைச் சார்ந்த 17 மீனவர்கள், காரைக்காலைச் சார்ந்த 9 மீனவர்கள் என 26 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய ராமேஸ்வரம், நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் திங்கட்கிழமை மன்னார் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் 40 தமிழக மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் 6 விசைப்படகுகளை இலங்கை நீதிபதிகள் விடுவிக்க மறுத்து விட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் கடற்தொழில் இயக்குநரகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு புதன்கிழமை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.