நில மோசடி வழக்கு: மகிந்த ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் அதிரடி கைது
சென்னை: நிலமோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் மகிந்த ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் மல்வாணை என்ற இடத்தில் 16 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு மகிந்த ராஜபக்சேவின் தங்கை நிருபமா ராஜபக்சேவின் கணவரான திருக்குமரன் நடேசன் ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
இதனடிப்படையில் இன்று போலீசில் திருக்குமரன் நடேசன் ஆஜரானார். விசாரணை நடத்திய பின்னர் திருக்குமரன் நடேசனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்சேவுக்கு தமிழக கோயில்களில் யாகம் நடத்தியவர் திருக்குமரன் நடேசன். கடந்த 2012-ம் ஆண்டு ராமேஸ்வரத்துக்கு திருக்குமரன் நடேசன் வந்தபோது சரமாரியாகத் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.