கேபிள் வயரால் அடித்து விரட்டப்பட்ட நாகை மீனவர்கள்.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்துவிரட்டினர்.
நாகை: கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த 2 நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குள் சென்று வருகின்றனர். அப்போதும் தங்களுக்கு போதுமான மீன்கள் கடலில் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

படகுகளில் மூலம் செல்லும் மீனவர்களும் மீன்வரத்து கடலில் குறைவாக இருப்பதாக குறைந்த மீன்களுடன் கரை திரும்பி வருகின்றனர். எனினும் தங்களது வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள படகில் மீன்பிடிக்க சென்றால், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து விரட்டியடிக்கப்படும் அவலம் மீண்டும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது.
ஆறுகாட்டுத்துறை பகுதியிலிருந்து சசிகுமார், ஆறுமுகம் ஆகியோரின் படகுகளில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்தபோது, அப்போது ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடிக்க தொடங்கினர்.
அத்துடன் தங்களிடமிருந்த கேபிள் வயரை கொண்டே மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையின் எதிர்பாராத தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பினர். தாக்குதல் காரணமாக கரையோர மீனவர்கள் கடும் கொந்தளிப்பிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுகிறதே என்ற அச்சத்திலும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications