இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 6 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!
தமிழக மீனவர்கள் 6 பேரை மீண்டும் சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 6 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது. அதன்பின்னர் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட பின்னரும் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியும் இலங்கை கடற்படை அட்டூழியம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் மீனவர்கள் படகில் போதைப் பொருள் இருந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டை இலங்கை கடற்படை சுமத்தியுள்ளது.
சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்ததாகவும் தமிழக மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது இலங்கை கடற்படை. காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு நாடகமாடி மீண்டும் கைது செய்துள்ளது மீனவர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.