குடிநீர் பிரச்சினையைச் சுட்டிக்காட்டினால் கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதா?: ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் எதிர்கட்சியினர் குடிநீர் பிரச்சனை குறித்து சுட்டிக்காட்டினால் கூட அவைக்குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்கிவிடுகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் ஸ்டாலின் தனது வெளிநடப்பிற்கான காரணத்தை தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஒரு பிரச்சினை குறித்து பேச எழுந்தார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். தி.மு.க. சார்பில் அன்பழகன், இந்திய கம்யூனிஸ்டு குணசேகரன் ஆகியோர் பேசினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதி பேசும்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறித்து ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். மாசு கட்டுப்பாட்டு வாரியம், காசு கட்டுப்பாட்டு வாரியமாக மாறிவிட்டதோ என்று கேட்டார். சபாநாயகர் தனபால் அதை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அனுமதி மறுப்பதா?
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான நீதிபதி ரகுபதி அளித்துள்ள அறிக்கை குறித்து விவாதம் நடத்த அனுமதி கேட்டேன். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
நீதிபதி ரகுபதி அறிக்கை
நீதிபதி ரகுபதி அளித்துள்ள அறிக்கை முதல்வரையும் சில அதிகாரிகளையும் காப்பாற்றும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்ட சில பக்கங்களில் இணைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் அளிக்க வில்லை. இந்த அறிக்கை அரைகுறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க அனுமதி வழங்க வில்லை.
விவாதிக்க மறுப்பு
இன்று நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்ட போதும் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இதையடுத்து சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பான விவாதம் நடந்தது.
அவை குறிப்பில் நீக்கம்
இதில் தி.மு.க. சார்பில் ஜெ. அன்பழகன் பேசினார். அவர் பல்வேறு குறைகளை சுட்டி காட்டினார். அவை அனைத்தையும் சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்.
ஒருதலைப்பட்சம்
நேற்று சுற்றுச்சூழல் தொடர்பாக பேசிய அமைச்சர் தி.மு.க. ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக பேசினார். அதை அவை குறிப்பில் இருந்த நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசியபோது சபாநாயகர் அதை அவை குறிப்பில் இருந்து நீக்க மறுத்து விட்டார்.
பாலபாரதி எம்.எல்.ஏ
இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பாலபாரதி குடிநீர் வினியோகம் பற்றி பேசும்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் காசு கட்டுப்பாட்டு வாரியமாக மாறிவிட்டதோ என்று சந்தேகம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். ஆனால் அதை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார்.
வெளிநடப்பு
சபாநாயகர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக நடந்து வருகிறார். ஆளும் கட்சிக்கு சாதகமாகவே நடக்கிறார். சபாநாயகரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.