உக்கிர போஸ்டர் யுத்தம் நடத்தும் மு.க. ஸ்டாலின் - மு.க. அழகிரி ஆதரவாளர்கள்
சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் ஆதரவாளர்களும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களும் உக்கிரமான போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து தற்காலிகமாக மு.க. அழகிரி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மு.க. அழகிரி, திமுக தலைமையை விமர்சித்து வருகிறார்.

கொடும்பாவி எரிப்பு
இந்நிலையில் மு.க. ஸ்டாலின், 3 மாதத்தில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட தகவல் ஸ்டாலின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மு.க. அழகிரியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

கோழை அழகிரியே
அதேபோல் அழகிரிக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் வீதிதோறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் வருகின்றன. சென்னை புழல் ஒன்றிய திமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், 90 வயது தலைவர் கலைஞரை மிரட்டும் கோழை அழகிரியே! மோதாதே! எங்கள் தலைவரிடம்!! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்ருகள்..
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில், சத்ருகளுக்கு சத்ரியர்... சகுனிகளுக்கு சாணக்கியர்.. தெய்வம் எதற்கு.. கோவில் எதற்கு../ உந்தன் புன்னகை ஒன்றே போதும் என்றும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்ய முடியும், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீழ்பிடித்த புண்
சென்னையில் ஒட்டப்பட்ட மற்றொரு போஸ்டரி, சீழ் பிடித்து புரையோடிய புண்ணை அறுத்தெறியுங்கள். அறுவை சிகிச்சையின்போது சிறிது வலி இருக்கும். மிகக் குறைந்த அளவு ரத்தமும், சீழுடன் வெளியேறும். அறுவை சிகிச்சைக்கு பின் வலியிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும். உடல் மேலும், வலிமையும், வலிவும் பெறும். உடனே தேவை அறுவை சிகிச்சை என்று அழகிரிய கட்சியைவிட்டே நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications