110 விதியின் கீழ் ஜெ. அறிவித்த திட்டங்கள் என்ன ஆச்சு?: சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி
சென்னை: சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக அரசு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. அவை கூடியதும் முதலில் மறைந்த உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் நடைபெற்றது.

பின்னர், தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரை 5 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது குறித்து சபாநாயகர் தனபாலிடம் எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பின்னர் அவைக்குத் திரும்பிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிக்கப் பட்ட திட்டங்களின் நிலை குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினார்.
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்த தமிழக அரசு அதை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தது என அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசினர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications