திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்... உங்கள் குறைகள் தீரும்.... பெரம்பலூரில் ஸ்டாலின்
பெரம்பலூர்: திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்களைப்போன்ற எண்ணற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை உங்கள் துணையோடு நிறைவேற்றுவோம் என்று பெரம்பலூரில் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காட்டில் திமுக பொருளாளர் ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். பொதுமக்கள், வணிகர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மேற்கு ஷாமியா பள்ளிவாசலில் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் சந்தித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் குழு பெண்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று பெரம்பலூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம் என்ற மாற்றத்தை உருவாக்கிடும் நோக்கத்துடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை கடந்த செப்டம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கி திருச்சி வரை 11 மாவட்டங்களுக்கு சென்று முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.
2ம் கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் துவக்கிய மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
நேற்று அவர் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து தங்களது கோரிக்கைகள், குறைகள், குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சுய உதவிக்குழுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரம்பலூரில் ஸ்டாலின்
இன்று மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் விடியல் மீட்புப்பயணம் மேற்கொண்டார். இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து தனது நடைபயணத்தை துவக்கினார். அவர் காந்தி சிலை, காமராஜர் வளைவு வழியாக என்எஸ்கே மகால் வரை நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பெண்கள் மத்தியில் பேச்சு
ஏராளமான மக்கள் சாலையின் இருபுறம் குவிந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் ஸ்டாலினுடன் நடைபயணமாகவே சென்றனர்.பின்னர் காலை 10 மணியளவில் பெரம்பலூர் என்எஸ்கே மகாலில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது திமுக ஆட்சியில் திறம்பட செயல்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், தற்போது செயல்பாடின்றி முடங்கி கிடப்பதாகவும், வங்கிகளில் கடன் தர மறுப்பதாகவும் பெண்கள் குற்றம் சாட்டி பேசினர். அதற்கு ஸ்டாலின், அடுத்து திமுக ஆட்சியில் உங்களது குறைகள் தீர்க்கப்படும் என்றார்.

விவசாயிகளிடம் குறை கேட்பு
தொடர்ந்து வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம் ஆர்.எஸ்.திருமண மகாலில் விவசாயிகளை சந்தித்து ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மும்முனை மின்சார தட்டுப்பாடு, விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது, கரும்பு நிலுவைத்தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகள் விளக்கினர்.

இஸ்லாமிய மக்களுடன்
அதன்பின் மதியம் குன்னம் தாலுகா லப்பைக்குடிக்காடு எம்ஜிஎம் கோல்டன் மகாலில் இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து பேசினார். மசூதிக்குச் சென்று இஸ்லாமியர்களின் குறைகளை கேட்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தபோது, தொழுகை அழைப்பு கேட்ட உடன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து பேசியதை அங்கிருந்த இஸ்லாமியர்கள் எல்லாம் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.

வேலையில்லா பட்டதாரிகள்
வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்து ஸ்டாலின் கலந்துரையாடினார். எந்தவித வேலை வாய்ப்பும் உருவாகாததால் எந்த ஒரு வேலையையும் தேட முடியாததால், இழிவு நிலையில் இருந்து வருவதாக வேலையில்லா பட்டதாரிகள் வேதனை தெரிவித்தனர். அப்போது பேசிய ஒரு பெண் பட்டதாரி, என்னோடு சேர்த்து 45 லட்சம் பெண்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறோம். ஆனால் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலை கிடைக்கவில்லை என சோகத்தோடு குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு இல்லை
அவர்களிடம் பேசிய ஸ்டாலின், எல்லா தரப்பு மக்களின் முகங்களை பார்க்கும்போது, சந்தோஷம் அடையும் என்னால், உங்களை இந்த நிலையில் பார்க்கும்போது என்னால் சந்தோஷம் அடைய முடியவில்லை என குறிப்பிட்டார். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய அரசு அதற்கான எந்த திட்டத்தையும் உருவாக்காததின் அவலமே இந்த வேலையில்லா திண்டாட்டம் என குறிப்பிட்டார். 45 லட்சம் பெண்கள், 24 லட்சம் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் என வேலையில்லாமல், தவித்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் நிறைவேற்றுவோம்
கல்வியில் பின் தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டத்தை சமச்சீர் கல்வி என்ற உண்ணதமான திட்டத்தின் மூலம் 10ம் வகுப்பு தேர்ச்சியில் கடந்த ஆண்டு 2ம் இடத்தை பிடித்தது. எனவே மக்களுக்காக அரசு திட்டங்கள் தீட்டினால் எல்லவற்றையும் மாற்ற முடியும். திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்களைப்போன்ற எண்ணற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை உங்கள் துணையோடு நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்

அரியலூரில் ஸ்டாலின்
குன்னம் சென்ற ஸ்டாலின், அங்கு பால் உற்பத்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் அரியலூர் சென்றார்.அங்கு மதிய ஓய்வுக்கு பின் மாலை 5 மணிக்கு அரியலூர் கடைவீதியில் பிரசார பயணம் மேற்கொண்டார். 5.30 மணிக்கு அரியலூர் காவேரி மகாலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின். 6 மணிக்கு அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications