மீத்தேன் திட்டத்திற்கு நான் அனுமதி கொடுக்கல்ல.. வைகோ சொல்வது பொய்.. ஸ்டாலின் ஆவேசம்
மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கவில்லை என்று ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.
புதுக்கோட்டை: திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 2006ம் ஆண்டு மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார்.
புதுக்கோட்டை நெடுவாசல் மக்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டம் கொண்டு வரப்பட்டதாக வைகோ குற்றம்சாட்டி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பதில்:
கையெழுத்து போட்டது உண்மை
மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியின் போது அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசு திட்டத்தை ஆய்வு நடத்துவதற்காக அனுமதி கேட்டது. அப்போது, அந்த ஆய்வு நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது உண்மை.
அரசியல் ஞானி வைகோ
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஆய்வுகள் மேற்கொள்ளும் போது சுற்றுசூழல் பாதிக்கப்படுமா, நன்மை என்ன தீமை என்ன என்பது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருக்கும். இதை எல்லாம் அரசியல் ஞானியாக இருக்கக் கூடிய வைகோ படித்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
விதிமுறைகள் என்ன?
மக்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும், ஆய்வு நடத்த வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், உள்ளிட்டவைகள் முடிந்த பின்னர்தான் மீத்தேன் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆய்வு நடத்துவதற்கு தான் நாங்கள் அனுமதி கொடுத்தோமே தவிர திட்டத்திற்கு அல்ல.
மத்திய அரசின் முடிவு
மீத்தேன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்க முடியாது. திட்டத்தை கொண்டு வருவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடமே இருக்கிறது. வைகோவிற்கு என் மீது எப்போதுமே ஒரு தனி பாசம் உண்டு. அதனால்தான் என் பெயரை அடிக்கடி பயன்படுத்தி அவர் விளம்பரத்தை தேடிக்கொள்கிறார் என்று ஸ்டாலின் கூறினார்.