ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டவர் ஜெயலலிதா: ஸ்டாலின் தாக்கு
தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் குறித்து ஜெயலலிதா தவறான தகவலை அளித்து வருகிறார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் 90 சதவீத பணிகளை நிறைவேற்றியது திமுக. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த பணிகளை கிடப்பில் போட்டவர் தான் ஜெயலலிதா.
பின்னர் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஏனோதானமாக நிறைவேற்றியதாக தெரிவித்தார். மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜெயலலிதா தவறான தகவலை அளித்து வருகிறார் என குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி அமைந்ததும் இரண்டு மாதங்களுக்குள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
தமிழத்தில் தொழில் வளர்ச்சியை பற்றி கவலைப்படாதவர் ஜெயலலிதா. தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களுக்கு தொழில் நிறுவனங்கள் வெளியேறுகி்ன்றன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.