அரசு அரங்கத்தை அசால்ட்டாக பிடித்த ஸ்டாலினால் அரசையும் பிடிக்க முடியும்: வைரமுத்து #Murasoli75
சென்னை: அரசு கட்டிடத்தை பிடித்த ஸ்டாலினால் அரசையும் பிடிக்க முடியும் என புகழாரம் சூட்டினார் கவிஞர் வைரமுத்து.
முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை தொடங்கியது. இதில் பல முன்னணி நாளிதழ்களின் ஆசிரியர்களும், ரஜினிகாந்த், கமல், பிரபு போன்ற நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெற வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டதால் அதை தவிர்த்திருந்தது திமுக. அதேநேரம், நடிகர் கமல் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. இரு நடிகர்களுமே விழாவுக்கு வந்திருந்தனர். ஆனால் கமல் மேடையிலும், ரஜினி முன்வரிசையிலும் அமர்ந்திருந்தார்.
கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகும். அவர் முரசொலியின் ஆரம்ப காலத்தில் கருணாநிதி எப்படியெல்லாம் பத்திரிகையை வளர்த்தார் என்பதை பற்றி எடுத்து கூறினார். 18 வயதில் முரசொலி பத்திரிகையை நடத்த கருணாநிதி பொறுப்பெடுத்ததாகவும், அது காதலியை தேடும் வயது என்றும், திருமண பத்திரிகை அடிக்கும் வயதில், கொள்கைக்காக பத்திரிகையை நிறுவியவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.
பணம், செல்வாக்கு என்ற எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு பத்திரிகையை நிறுவி அதை 75 வருட காலம் நீடித்து வளர செய்தது கருணாநிதி மட்டுமே என்றும் வைரமுத்து தெரிவித்தார்.
உரையின் இறுதியில், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை பற்றி குறிப்பிட்டார் வைரமுத்து. "எனக்கு ஒரு ஆச்சரியம். திமுக விழாவிற்கு எப்படி அரசு அரங்கத்தை பெற முடிந்தது? அரசு அரங்கங்களை முன்பதிவு செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அதை ரத்து செய்ய அரசுக்கு உரிமையுண்டு. அப்படியிருந்தும் அரசு அரங்கத்தை பதிவு செய்து அதில் விழாவை நடத்தியது பெரும் திறமை. அரசு கட்டிடத்தை பிடித்த மு.க.ஸ்டாலின், அரசையும் பிடிக்க முடியும்" என்றார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications