விருத்தாச்சலம் வேட்பாளர் மாற்றம்... பிரசாரத்தை ரத்து செய்த ஸ்டாலின்
விருத்தாச்சலம்: விருத்தாசலம் திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக நேற்று நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக தங்க.ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 5 மணிக்கு தங்க.ஆனந்தனை ஆதரித்து விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார்.
இந்த நிலையில், விருத்தாச்சலம் தொகுதி திமுக வேட்பாளர் தங்க.ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக பொருளர் பாவாடை கோவிந்தசாமி இந்த தொகுதிக்கான புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தங்க.ஆனந்தனை ஆதரித்து நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க திரண்டிருந்த திமுகவினர், வேட்பாளர் மாற்றத்தை அறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுக நிர்வாகிகள் சிலர் வேட்பாளர் திடீர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேடையில் விமர்சித்துப் பேசினர்.
இந்த நிலையில், விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்த மு.க.ஸ்டாலின், புறவழிச் சாலை வழியாக நெய்வேலிக்குச் சென்றார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.