234 தொகுதியிலும் திமுக வெல்லும்... ஸ்டாலின் உற்சாகம்
சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில், வெயில் மற்றும் மழை பயம் காரணமாக பெரும்பாலான முக்கிய தலைவர் அதிகாலையிலேயே வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வாக்குச்சாவடிக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி மற்றும் மருமகள் என குடும்பத்தினருடன் வந்திருந்தார். வாக்களிக்க பிரபலங்களுக்கு என தனி வரிசை இல்லாததால், பொதுமக்களுடன் அவரும் வரிசையில் நின்று, தனது வாக்கைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "இத்தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையும், திமுகவிற்கு ஆதரவு அலையும் வீசுகிறது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 234 தொகுதியிலும் வெற்றி பெறும்" என்றார்.
முன்னதாக, இன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications