ஸ்டாலின் கைது கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. அதிரடி கைது!
ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Recommended Video

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவையை அடுத்த வடகோவை பகுதியில் , திமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். திமுகவினரின் போராட்டம் காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதேபோல, ஸ்டாலின் கைது செய்ப்பட்டதை கண்டித்து கரூரில் திமுகவினர் போராட்டம் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானியிலும் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலும் மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சியை சேர்ந்த திரளானவர்களும் பங்கேற்றனர். அப்போது தூத்துக்குடியில் பொது மக்களின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications