தமிழ்நாட்டை டெங்கு மாநிலமாகவும், குட்கா மாநிலமாகவும் மாற்றியதே அதிமுக சாதனை - ஸ்டாலின் கோபம்
சென்னை : ஆர்.கே. நகர், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் தி.மு.க செயல் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் இன்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
இன்னமும் டெங்கு குறித்தான நடவடிக்கைகளை மாநில அரசு சரியாகச் செய்யவில்லை. ஆர்.கே நகரில் பல பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துவருகிறது இதைப்பற்றி மாநகராட்சி அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை என்றார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றத் தொகுதியான ஆர்.கே.நகரை அ.தி.மு.க.,வினர் மறந்துவிட்டார்கள். வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளும் சரியான நிலையில் செய்யப்படவில்லை என்றார் ஸ்டாலின்.
ஆளும்கட்சியினர் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று மக்கள் காத்திருப்பதாகவும், தமிழகத்தை குட்கா மாநிலமாகவும், டெங்கு மாநிலமாகவும் மாற்றியதே இவர்களின் ஒரே சாதனை என்றும் அதிமுக அரசை விமர்சித்து உள்ளார்.