சட்டசபை கூடும் வரை ஆட்சி நீடிக்குமா? - சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூடும் வரை அதிமுக அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை ஜூன் 14ஆம் தேதி வரை அதிமுக அரசு நீடிக்குமா? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் ஈரோடு திண்டல் செம்மாம் பாளையம் குளத்தை தூர்வாரி வருகிறார்கள். இந்த குளத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாரப் போவதாக கூறி பணியை தொடங்கி வைத்தார். வெறும் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்ட பணி இன்றும் அப்படியே தான் கிடக்கிறது. மக்களை ஏமாற்றவே இப்படி செய்துள்ளார்கள் என்றார்.

மக்கள் பணியில் திமுக
திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதை மக்களும் அறிவார்கள். அதன்படி நீர்நிலைகளை தூர்வார கட்சி தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருந்தேன். அவர்களும் தூர்வாரும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த பணிகளை நானே நேரில் சென்றும் பார்த்து வருகிறேன்.

விவசாயம் செழிக்கும்
அந்த வகையில் ஈரோடு செம்மாம்பாளையம் குளத்தை ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரி உள்ளார்கள். மழை பெய்தால் இந்த குளத்தில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த தண்ணீர் விவசாயத்துக்கும் பயன்படும் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.

எந்த தவறுமில்லை
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது தவறில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குற்றவாளி என்று கூறப்பட்ட ஜெயலலிதா படம் வைக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி படம் வைப்பதில் ஒரு தவறுமில்லை என்றார்.

ஆட்சி நீடிக்குமா?
வரும் 14ஆம்தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது. அதுவரைக்கும் இந்த ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. சட்டசபை கூடும் முன் இந்த அரசு இருக்குமா? என்பதை முதலில் பார்ப்போம். சட்டசபை கூடினால் தி.மு.க. தனது ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றும் என்றும் கூறினார்.

3 அணிகள்
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அ.தி.மு.க ஒரு அணியாக இருந்தது. அவர் மறைந்தபிறகு 2 அணியாக மாறி இப்போது 3வது அணியும் உருவாகிவிட்டது. இன்னும் போக...போக எத்தனை அணிகள் உருவாகுமோ...? தெரியவில்லை என்றார்.

நீங்கதான் கேட்கணும்
இன்னும் 60 நாளில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு சசிகலா கெடுவிதித்துள்ளதாக தினகரன் கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின் இதுபற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications