போட்டி சட்டசபைக் கூட்டம் ஏன் நடத்தினோம் தெரியுமா? விளக்கம் சொன்ன ஸ்டாலின்
சென்னை : சட்டசபை நடவடிக்கைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் தவறு யார்மீது என்று மக்களுக்குத் தெரியவரும் எனவே சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவை எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை காட்டவே இன்று போட்டி சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும், சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறுவது போன்று போட்டி பேரவைக் கூட்டத்தை நடத்திக் காட்டினர். அரை மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாதிரி சட்டமன்றம் எப்படி நடக்கும் என்பதை எங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் நடத்தியிருக்கிறோம் என்று கூறினார்.

கேலி, கிண்டல் கிடையாது
மாதிரி சட்டசபை நடத்தியிருந்த நேரத்தில், எங்களது கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் அவைத் தலைவராக இருந்து செயல்பட்டார். இதில் யாரையும் கிண்டலோ, கேலியோ செய்து, யாரையும் விமரிசிக்கக் கூடாது என்ற அடிப்படையில், மக்கள் பிரச்னையை மட்டுமே பேச வேண்டும் என்று உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்தரவிட்டு நடத்தியிருக்கிறோம்.
உதாரண சட்டசபை
ஒரு சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.
இப்போது நாங்கள் மாதிரி சட்டப்பேரவையை நடத்தினோம். அதனை நீங்கள் பார்த்தீர்கள். பதிவும் செய்து கொண்டீர்கள். பொதுமக்களுக்கும் பேரவைக் கூட்டம் எப்படி நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மறுபரிசீலனை
திமுக உறுப்பினர்கள் அவைக்கு வரக் கூடாது என்று அவைத் தலைவர் உத்தரவு போட்டிருக்கும் நிலையில், அவைக்குச் சென்ற எங்களது திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில், இடை நீக்கம் செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சபாநாயகர் மறுப்பு
ஆனால், அதற்கு அவைத் தலைவர் தனபால் ஒப்புக் கொள்ளவில்லை. அதே போல, பிற கட்சித் தலைவர்களும் இடை நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களுக்கு, கட்சித் தலைவர் கருணாநிதி சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூட்டப்பட்ட வாயில்
எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல முடியாத அளவுக்கு இன்றும் நுழைவு வாயில் எண் 4ன் கதவு பூட்டப்பட்டுள்ளது.
இடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே, விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

நேரடி ஒளிபரப்பு
இன்றைக்கு நடைபெற்ற மாதிரி சட்டசபைக் கூட்டத்தை நேரடியாக பதிவு செய்து ஒளிபரப்பு செய்யப்பட்டதாக அறிந்தேன். இந்த நிலை தான் வேண்டும் . அவை நடவடிக்கைகள் மக்களுக்கு தெரிய வேண்டும். சட்டசபை நடவடிக்கைகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், யார் தவறு செய்கிறர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.

அடுத்த கட்ட நடவடிக்கை
எனவே, பேரவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தலைவருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications