சென்னை மெரினாவில் மறியல்: கைது செய்யப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுதலை
மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக செல்வதால் சென்னை அண்ணா சாலையே முடங்கியது.
Recommended Video

சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என நடத்தி வருகின்றனர்.

அதன்படி 5-ஆவது நாளாக இன்று அண்ணா சாலையில் மா சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு மு.க.ஸ்டாலினும் கூட்டணி கட்சியினருமான திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்றனர்.

அங்கிருந்து அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று வருகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டாலின் உள்ளிட்டோர் காமராஜர் சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து உழைப்பாளர் சிலை அருகே தரையில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினை குண்டு கட்டாக போலீஸ் தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications