சசிகலாவின் பேச்சுக்கு பதில் சொல்லி என் தரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை: ஸ்டாலின் சுளீர்
தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக எத்தனை பிரிவாக உடைந்தாலும், அக்கட்சி எங்களுக்கு எதிரிதான். சசிகலாவின் கூற்றுக்கு பதில் சொல்லி, எனது நேரத்தையும், தகுதியையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் அதிமுகவினரின் ஒவ்வொரு அசைவும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. யார் ஆட்சியை பிடிப்பது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதில் தொடந்து குழப்பம் நிலவி வருகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் நிலையான ஆட்சியில்லை. தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்பக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உள்ளது.
அதிமுக.வில் யார் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது என பதவி வெறி நிலவுகிறது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காபந்து முதல்வராக இருந்தும் எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார். கவர்னர் உடனடியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக எத்தனை பிரிவாக உடைந்தாலும், அக்கட்சி எங்களுக்கு எதிரிதான். சசிகலாவின் கூற்றுக்கு பதில் சொல்லி, எனது நேரத்தையும், தகுதியையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications