ஜெயித்தால் நல்லதிட்டங்களை அமல்படுத்துவோம்… தோற்றுப்போனால் போராடுவோம்: ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கடந்த, நான்கரை ஆண்டுகளாக கோமா நிலையில் ஆட்சி நடக்கிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக
தோல்வியடைந்தால், திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற, வெற்றி பெறும் அரசை வலியுறுத்துவதுடன், போராட்டமும் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு நாமே விடியல் பேரணி மேற்கொண்டு வரும் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும், விவசாயிகளையும் சந்தித்தார்.
அரூரில், பேசிய ஸ்டாலின், இதுவரை, 174 சட்டசபை தொகுதிகளில் நமக்கு நாமே பயணம் முடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது.

குடிநீர் திட்டம்
தி.மு.க போராட்டம் நடத்தியதால், ஜெயலலிதா அவசர கதியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். இத்திட்டம் மூலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்னும், 60 சதவீத மக்களுக்கு குடிநீர் சென்றடையவில்லை.

கடனுதவி
கடந்த, நான்கு ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தாராளமாக கடனுதவி வழங்கப்படும்.

உற்சாகம் தரும் பயணம்
நமக்கு நாமே விடியல் மீட்பு பேரணியை, பல அரசியல் கட்சி தலைவர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களால் முடியாததை நான் செய்து வருவதால், அவர்கள் அப்படி பேசி வருகின்றனர். ஆனால், எனக்கு இந்த பயணம் ஊக்கமளிக்கிறது.

வேலை வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த, நான்கரை ஆண்டுகளாக காணொலி காட்சியில், கோமா நிலையில் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை. தற்போது, 84 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்துள்ளனர். இதில், 43 லட்சம் பேர் பெண்கள். கடந்த திமுக ஆட்சியில், 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள்
தமிழக அரசு, நான்கரை ஆண்டுகளுக்கு பின், தொழில் முனைவோர் மாநாடு நடத்தியது. இம்மாநாட்டில், இரு நாட்களில், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக தெரிவித்தனர். இதில், தற்போது எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன என்பதை, அதிமுக அரசால் தெரிவிக்க முடியுமா?

தவறுகள் நடந்தது உண்மை
அதிமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில், தெரிந்தும், தெரியாமலும், சில தவறுகள் நடந்து இருக்கலாம். வரும், திமுக ஆட்சி, கரெப்சன், கமிஷன், கலெக்ஷன் இல்லாத ஆட்சியாக அமையும் என்றார்.

தோற்றுப்போனால் போராடுவோம்
பல துறை நிபுணர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, அப்போது, டாக்டர் சங்கர் என்பவர், தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், நீங்க அறிவித்த வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்து, உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்' என, கேள்வி எழுப்பினார். அதற்கு, சிரித்து கொண்டே பதில் அளித்த ஸ்டாலின், 'திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற, வெற்றி பெறும் அரசை வலியுறுத்துவதுடன், போராட்டமும் நடத்தப்படும்' என்று கூறினார்.

சிறுமிகளுக்கு நிதி உதவி
நலப்பரம்பட்டியில் குட்டையில் மூழ்கி இறந்த 5 சிறுமிகளின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தலா 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார். இரவில் பாலக்கோட்டில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்டாலின், தர்மபுரி மாவட்ட பயணத்தை முடித்துக் கொண்டு தேன்கனிக்கோட்டை வந்தடைந்தார்.

கிருஷ்ணகிரியில் வரவேற்பு
இரவில் அங்கு தங்கிய ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேன்கனிக்கோட்டை மல்லிகை பண்ணையில் இருந்து புறப்பட்ட அவருக்கு, கோட்டை வாசல் பகுதியில் பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். ஏடிசி டெம்போ, அன்னியாளம், கக்கதாசம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூடி நின்று பட்டாசு வெடித்து ஸ்டாலினை வரவேற்றனர்.

மக்களைத் தேடி வருவோம்
மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைச்சர், எம்பி, எல்எல்ஏ என்று யாராவது உங்களை வந்து சந்தித்திருக்கிறார்களா? ஆனால் நாங்கள் எப்போதும் உங்களை தேடி வருவோம், நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போதும், துணை முதல்வராக இருந்த போதும் எத்தனை முறை தளிக்கும், கிருஷ்ணகிரிக்கும் வந்திருப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களை சந்திக்க திமுக என்றுமே தயங்கியதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications