தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நா.முத்துகுமார்... ஸ்டாலின் இரங்கல்
சென்னை: மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
மஞ்சள் காமாலை மற்றும் மாரடைப்பு காரணமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இன்று காலை அகால மரணமடைந்தார். இரண்டு முறை தேசிய விருதைப் பெற்ற முத்துக்குமார், 41 வயதில் மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று அவரது இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெற்றது. முத்துக்குமாரின் மரணத்திற்கு திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 'திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.
'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய "ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும்", 'சைவம்' படத்தில் எழுதிய "அழகே அழகே" பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.
கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.