எந்த எதிர்பார்ப்பும் இன்றி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் – மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுகவின் வளர்ச்சிக்கு எந்த எதிர்பாப்புமின்றி கிடைக்கும் பொறுப்பை ஏற்று பாடுபடுவேன் என்று திமுக பொருளாளரான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அப்போது அவரிடம், தி.மு.க பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "திமுகவில் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு வரும் தேர்தல்கள் குறித்து அவதூறு பரப்பப்படுகிறது. கிளைக் கழகத்திலிருந்து தொடங்கி, மாவட்டக் கழகம் வரையில் முடிந்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகத்தினுடைய தேர்தல் வரும் 9ஆம் தேதி கூடவிருக்கிற பொதுக்குழுவில் நடைபெற இருக்கிறது. அதற்குடைய வேட்புமனுத் தாக்கல் 7ஆம் தேதி செய்திட வேண்டும் என்ற அறிவிப்பும் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.
இதற்கிடையில் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவில் ஏதேனும் ஒரு கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விஷமத்தனமாக யாரோ திட்டமிட்டு இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். இதனை நான் வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல, இதை நான் முழுமையாக மறுக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக சட்டமன்ற உறுப்பபினர் ஜெ. அன்பழகன், என்னிடத்தில் தலைமைக் கழகத்தில் பொருளாளர் பொறுப்புக்கான வேட்புமனுவை கொடுத்து கையெழுத்து பெற்றிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தியும் என்னிடத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லி, அந்த வேட்புமனுவில் கையெழுத்து பெற்றிருக்கிறார்.
எனவே இந்த நிலையில்தான் தலைமைக் கழகத்தினுடைய தேர்தலை நடத்த இருக்கிறோம். அதுமட்டுமல்ல தலைவர் பொறுப்புக்கும் கலைஞர் போட்டியிட வேண்டும் என்று அன்பழகன், காந்தி, இன்னும் சில மாவட்ட செயலாளர்களும் கையெழுத்துக்களை பெற்று வருகிற 7ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
எனவே யாரும் இதனை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே திமுகவில் இருக்கிற தொண்டர்களிடையே குழப்பதை விளைவிக்க வேண்டிய அடிப்படையில்தான் இந்த வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் எதையும் எதிர்பார்த்து திமுகவில் என்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருக்கவில்லை. எனக்கு வரக்கூடிய பொறுப்புக்களை நான் முறையாக பயன்படுத்தி அந்தப் பணியைத்தான் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேனே தவிர, எதற்கும் நான் ஆசைப்பட்டவனும் அல்ல என்பதுதான் உண்மை. எனவே இதனை யாரும் நம்ப வேண்டிய அவசமில்லை.
தலைவர் பொறுப்புக்கு கலைஞர் போட்டியிடுவதாக வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டியிருக்கிறார். பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக பேராசிரியர் கையெழுத்திட்டிருக்கிறார். பொருளாளர் பொறுப்புக்கு நானும் போட்டியிடுவதாக முடிவு செய்து கையெழுத்திட்டிருக்கிறேன். இதுதான் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.