முதல்வர் வேட்பாளராகும் மு.க.ஸ்டாலின்?: இளைஞர் அணி செயலாளர் பதவியை துறக்க முடிவு
சென்னை: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், 2016 ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர் தாம் வகித்து வரும் இளைஞரணி மாநில செயலர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பதவிக்கு, தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட கால இளைஞர்
மு.க. ஸ்டாலின், பல ஆண்டுகளாக, தி.மு.க., இளைஞரணி மாநில செயலராக உள்ளார். கட்சித் தலைவர் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் இருக்கும், அவரின் தலைமையில், இளைஞர் அணி இயங்குவதால், கட்சியின் மற்ற அணிகள் வளர்ச்சி அடையாமலும், முக்கியத்துவம் இல்லாமலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், இளைஞரணியை சீரமைக்கும் பணியில், ஸ்டாலின் ஈடுபட்டார். அப்போது, இளைஞரணியில், 40 வயதை கடந்த நிர்வாகிகளுக்கு, கட்சி அமைப்பில் பதவி வழங்கி விட்டு, 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும், இளைஞரணியில் பதவிகள் வழங்கப்பட்டன.
வாரிசு அரசியலுக்கு அடி
மாவட்ட வாரியாக, ஸ்டாலின், நேர்காணல் நடத்தி, தன் நேரடி பார்வையில், நிர்வாகிகளை நியமித்தார். அப்போது, வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், மாவட்ட செயலர்கள், சிபாரிசு செய்தவர்களுக்கு, பதவி வழங்கப்பட்டது. இதனால் மாவட்ட செயலர்களின் உத்தரவுக்குகட்டுப்பட்டே, அவர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தங்கம் தென்னரசுக்கு பதவி
அதனால், மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை, இளைஞரணியை சீரமைப்பது குறித்து, தீவிரமான ஆலோசனையில் இறங்கிஉள்ளார் ஸ்டாலின். இந்த சீரமைப்பின் ஒரு பகுதியாக, மாநில இளைஞரணி செயலர் பதவியை, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கொடுத்து, இளைஞர் அணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்?
கட்சியின் பொருளாளர் பதவியில் இருக்கும் ஸ்டாலினுக்கு, விரைவில் அதிகாரமிக்க பதவி வழங்கப்பட உள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைதேர்தலையொட்டி, கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும், அவர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பு வெளியாகும்
தற்போது லண்டன் சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்பியதும், இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன