எதிர்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத சபாநாயகர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: சட்டசபையில் சக்கர நாற்காலி வந்து செல்ல முடியாத இடத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக உறுப்பினர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறோம். அதே பெருந்தன்மை அதிமுக உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தின் 15வது சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ரோசையாவின் உரையுடன் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு 207வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சக்கர நாற்காலியுடன் அமர வசதி செய்து தரப்படவில்லை என்றும் அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை வரும் 20ம் தேதி தொடங்கும் என்றும், 23ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கருணாநிதியின் சக்கர நாற்காலி வந்து செல்லும் வகையில் இடம் ஒதுக்க சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தோம் என்றும், 89 உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சிக்கு பெரிய அறையை ஒதுக்கவும் கோரிக்கை வைத்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.
எங்களது கோரிக்கைகளை சபாநாயகர் பரிசீலித்ததாக கூட தெரியவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் 3 பேர் பேச வாய்ப்பு கேட்டும் 2 பேருக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற சீனிவேல் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல திரு காளிமுத்து சபாநாயகராக இருந்த போது சைதாபேட்டை தொகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் மரணமடைந்தார் அவருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அன்றைய தினம் அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொண்டோம் ஆனால் அதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார்.
இன்றைய தினம் சட்டசபைக்கு உள்ளேயே வராத உறுப்பினர் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவை ஒத்திவைக்கப்பட்டது. நாங்கள் இதற்கு எதுவுமே தெரிவிக்கவில்லை. இறந்த உறுப்பினரின் குடும்பத்தினரின் துக்கத்தில் நாங்கள் பங்கெடுத்துக்கொண்டோம்.
திமுக உறுப்பினர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறோம். அதே பெருந்தன்மை அதிமுக உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
சட்டசபைக்கு கருணாநிதி வந்து செல்லும் வகையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இன்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இன்னும் இரு தினங்கள் உள்ளது. திங்கட்கிழமை சபை கூடும் போது கருணநிதிக்கு உரிய இடத்தில் இருக்கை ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு ஏற்பாடு செய்யப்படாத பட்சத்தில் எங்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை தலைவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.