அதிமுக – பாஜக இடையே கள்ளத்தொடர்பு: ஸ்டாலின் புகார்
அரக்கோணம்: தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் பேசும் ஜெயலலிதா பாஜகவை விமர்சிக்காதது ஏன்?.அதிமுகவுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் ஏதேனும் கள்ளத்தொடர்பு உள்ளதா ?என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி சேந்தமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளர் திரு.என்.ஆர். இளங்கோவனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களை பற்றியும், மக்கள் நலனை பற்றியும் கவலை படுபவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
ஜெயலலிதா தனது பிரச்சாரங்களில் வாய்க்கு வந்தபடி பேசி, தொடர்ந்து பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்தி பேசுகிறார். திமுகவை விமர்சனம் செய்கிறார். ஜனநாயக அமைப்பில் இது தவறென்று கூட நான் சொல்ல வரவில்லை. ஆனால் நான் ஒரு கேள்வியை கடந்த 10 தினங்களாக பலமுறை கேட்டுவிட்டேன்.
பாஜக உடன் தொடர்பு
எனது கேள்வி என்னவென்றால் உங்கள் பிரச்சாரங்களில் மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும், திமுகவையும், தலைவர் கலைஞர் அவர்களையும் விமர்சித்து பேசுகிறீர்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சியையும், அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மோடியை பற்றியும் நீங்கள் ஏன் விமர்சனம் செய்வதில்லை. அதிமுகவுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் ஏதேனும் கள்ளத்தொடர்பு உள்ளதா ?
பதில் சொல்லாத ஜெ
இதே கேள்வியை நான் மட்டுமல்ல, அதிமுக கூட்டணியில் இருந்து இப்போது விலகிய இடதுசாரி கட்சியினரும், வேறு கட்சியினரும் கூட கேட்கிறார்களே, பதில் சொல்ல ஜெயலலிதா தயாரா ?
கரசேவையில் ஜெ. பங்கு
400 ஆண்டுகாலம் பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதை முதன்முதலில் கண்டித்தவர் நமது தலைவர் கலைஞர். அதேநேரத்தில் டெல்லியில் நரசிம்மராவ் தலைமையில் நடைபெற்ற தேசிய உரிமை குழு கூட்டத்தில் கரசேவையை ஆதரித்துப் பேசியவர் ஜெயலலிதா என நான் ஆதாரத்தோடு குறிப்பிடுகிறேன். இதை ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா ? அது அ.தி.மு.க.வின் அதிகார நாளேடான நமது, எம்.ஜி.ஆர்., தி இந்து போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.
சொன்னதை செய்யவில்லை
ஜெயலலிதா பொதுகூட்டங்களில் செய்வீர்களா, செய்வீர்களா என தொடர்ந்து கேட்டு வருகிறார். ஆனால் ஆட்சிக்கு வரும்போது நீங்கள் செய்வதாக சொன்னதையெல்லாம் செய்தீர்களா, செய்தீர்களா என மக்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவால் மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை.