4 ஆண்டு ஆட்சியின் குறைகளை மறைக்கவே “அம்மா ஏமாற்று மையம்” - சாடும் ஸ்டாலின்!
சென்னை: சென்னை பெருவெள்ளத்தின்போது நேர்ந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு விவகாரத்தை மறைக்கவே அம்மா அழைப்பு மையம் என்ற புதிய திட்டத்தை ஜெயலலிதா தொடங்கியிருக்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் குறைகளை கேட்காமல் ஆட்சி முடிவும் தருவாயில் இதுபோன்ற அழைப்பை மையங்களை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயல். 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் தற்போது அதில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து 1100 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்ற புதிய திட்டம் மக்களை ஏமாற்றும் செயல்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து புகார் தெரிவிக்கக் கூடிய வகையில் அந்த எண் கொடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புகார்கள் நிச்சயமாக வரும். வரும் தொலைபேசி அழைப்புகளை பெறுவதற்கு லட்சக்கணக்கானோரை நியமிக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதற்கும் நியமிக்க வேண்டும். ஆகவே இது காதில் பூ சுற்றுகிற வேலை. நான்கரை ஆண்டுகளாக மக்களின் குறைகளை கேட்காமல் திடீரென்று தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் இந்த செயல் மக்களை ஏமாற்றக் கூடிய நாடகம்.
ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியை அறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்டதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. உடைமைகள் இழக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையே மாறிப்போனது. அதற்கு ஒரு நீதி விசாரணை வையுங்கள் என்று சொல்லுகிறோம். அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக, மக்களை திசை திருப்புவதற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கிறார்.
சட்டப்பேரவை இன்று கூடுகின்ற நிலையில், லட்சக் கணக்கான ரூபாய் செலவில் நாளேடுகளில் விளம்பரம் செய்து, புதிய திட்டத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications