பேசலாம் வாங்க நிகழ்ச்சிக்கு ஒரு அதிகாரி கூட வரலையே... மு.க.ஸ்டாலின் ஏமாற்றம்
சென்னை: எனது கொளத்தூர் தொகுதியில் 16 பேசலாம் வாங்க நிகழ்ச்சியை நடத்தியும், அதிகாரிகளை அழைத்தும் கூட ஒரு அதிகாரி கூட வராதது வேதனைக்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் மு.க.ஸ்டாலின் அங்கு பேசலாம் வாங்க என்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
மொத்தம் 16 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அவர் தற்போது முதல் சுற்றை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல் சுற்று நிறைவு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்துப் பகுதி மக்களையும் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த "பேசலாம் வாங்க" நிகழ்ச்சியின் முதல் சுற்றை இப்போது வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறேன்.
மக்களுடன் மனம் திறந்து பேசினேன்
இந்த நிகழ்ச்சியின் போது, தொகுதி மக்களை சந்தித்தேன். அவர்களுடன் மனம் திறந்து பேசினேன். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அந்த குறைகளில் பலவற்றிற்கு வெற்றிகரமாக தீர்வு கண்டிருக்கிறேன்.
1550 புகார்கள்
இந்நிகழ்சி தொடங்கிய கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இன்றுவரை தொகுதி மக்களிடமிருந்து 1550 புகார்கள் பெறப்பட்டது. அவற்றில் 850 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதியுள்ள 450 புகார்களும் அரசின் அனுமதி கிடைக்காததால் தீர்வு காண முடியாமல் நிலுவையில் கிடக்கின்றன.
செயல்படாத அதிமுக அரசு - மக்கள் அதிருப்தி
அடுத்தடுத்து நடைபெற்ற "பேசலாம் வாங்க" நிகழ்ச்சி மூலம் செயல்படாத அ.தி.மு.க. அரசும், சென்னை மாநகராட்சியும் எந்த அளவிற்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும், நலத் திட்டங்களையும் புறக்கணித்துள்ளது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.
வராத அதிகாரிகள்
ஆனால் மக்களின் குறை கேட்கும் இந்நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்ட அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அ.தி.மு.க. அரசின் மிரட்டலுக்குப் பயந்து கலந்து கொள்ளவில்லை. அதனால் 16 "பேசலாம் வாங்க" நிகழ்ச்சிகளிலும் அதிகாரிகளுக்காக போடப்பட்ட நாற்காலிகள் எப்போதும் காலியாகவே கிடந்தன என்பதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.
மக்கள் அமோக ஆதரவு
கொளத்தூர் தொகுதி மக்களும், பல்வேறு குடியிருப்போர் நல சங்கங்களும் அளித்த அமோக ஆதரவிற்காகவும், ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புகார் தெரிவிக்க 7810878108
தொகுதிக்கு நான் வரும் போது அளிக்கும் புகார்களைத் தவிர, 7810878108 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் உங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் தொடர்ந்து சொல்லாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீர்வு காண உதவிய அதிகாரிகளுக்கும் நன்றி
அதே நேரத்தில், அ.தி.மு.க. அரசின் அச்சுறுத்தலையும் மீறி இந்நிகழ்ச்சியில் பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண உதவிய சில அரசு அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள். இந்த மாபெரும் மக்கள் சந்திப்பு கொளத்தூர் தொகுதி கழக உடன்பிறப்புகள் எடுத்துக் கொண்ட முயற்சியால்தான் சாத்தியமானது என்பதை நான் அறிவேன். அவர்களின் முயற்சிக்கும், பேரார்வத்திற்கும் எனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் குறைகளுக்கு தீர்வு காண்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நேரத்திலும், எவ்வித தயக்கமும் காட்டாது என்ற உறுதியை இந்த தருணத்தில் அளிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.