குதிரை பேரம் நடக்கும் முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் - ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்போது 109 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக எம்எல்ஏக்கள் குட்கா புகையிலை பொருளுடன் சபைக்கு வந்தனர். பேசும் போது குட்காவை எடுத்துக்காட்சி பேசினார் ஸ்டாலின்.
இதையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சட்டசபையின் உரிமை குழு கூடி எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

ஸ்டாலின் ஆலோசனை
இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 20 எம்.எல்.ஏ.க்களுடன் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்பது என முடிவு செய்யப்பட்டது. இன்று காலையில் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

திமுக எம்எல்ஏக்கள் கடிதம்
ஆலோசனைக்குப் பின்னர் 8 திமுக எம்எல்ஏக்கள் சட்டசபை செயலகத்திற்கு சென்றனர். அங்கு சபாநாயகர் இல்லாததால் சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்தனர். அதில், உரிமை குழு நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருந்தது.

15 நாள் அவகாசம்
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உரிமை மீறல் நோட்டீக்கு பதில் அளிக்க 15நாள் அவகாசம் கேட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணர்களை ஆலோசித்து தான் பதிலளிக்க முடியும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உத்தரவிட வேண்டும்
திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி அரசுக்கு உரிமை இல்லை. இன்றைக்கு 109 பேர் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

குதிரை பேரம்
ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும். எத்தனை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications