மீத்தேன் திட்டம் ரத்து.. மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் வரவேற்பு
மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதை வரவேற்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதை வரவேற்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாருமான ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட்டால் அப்பகுதியில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், மாநிலத்தின் வளர்ச்சி மேம்படும் என மத்திய அரசு தெரிவித்ததை முழுவதும் நம்பி, அதன் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியில் ஆய்வுப்பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே நான் துணை முதல்வராக இருந்த போது போடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்திலேயே "சுற்றுச்சூழல் ஆய்வுகள்" மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. கழக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அந்த நிபந்தனையின் காரணமாக, அதன் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் மத்தியில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சுற்றுப் புறச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இத்திட்டம் விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கும் என்று தெரிய வந்த உடனேயே, இத்திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்தது. கருணாநிதி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு அதை வலியுறுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 68-வது விஷயமாக 56-ம் பக்கத்தில் தெளிவாக மீத்தேன் திட்டம் குறித்த விவரங்களை தெரிவித்து "மீத்தேன் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம்" என்று வாக்குறுதியளிக்கப்பட்டது.
திமுக அந்த தேர்தல் அறிக்கையில், "தமிழகத்தின் காவிரிப் படுகைப் பகுதியான திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை வணிக ரீதியாக எடுக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது அந்த திட்டத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டதால் தமிழக அரசு அதை நல்லெண்ணத்தோடு ஒப்புக்கொண்டது. ஆனால் மீத்தேன் வாயு கிணறுகள் ஆழமாகத் தோண்டும் போது கடல் நீர் உட்புகும் என்பதால் அந்நிலம் விவசாயித்திற்குப் பயன்படாமல்- வீணாகும். அதனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எனவே வளம் மிக்க விவசாயப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட்டு, விவசாயத்தைப் பாதுகாத்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்" என்று அறிவித்ததை தமிழக மக்கள், காவேரி டெல்டா விவசாயிகள் நன்கு அறிவார்கள். இதைத் தொடர்ந்து நானே தலைமையேற்று விவசாயிகளைத் திரட்டி திருவாரூரில் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியிருக்கிறேன்.
அதன் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலுக்காக கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் பக்கம் 32-ல், "விவசாய நிலங்களில் "மீத்தேன் வாயு" மற்றும் "ஷேல் வாயு" திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்" என்றும் மக்கள் மன்றத்தில் அறிவித்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒளிவு மறைவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், தமிழக விவசாயிகளின் நலனிலும் மேம்பாட்டிலும் கழகம் வைத்திருக்கும் அக்கறையும், ஆர்வமும் அழமானதும், வெளிப்படையானதும் ஆகும்.
"மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்" என்று திமுக சார்பில் தொடர்ந்து வலிமையாக குரல் எழுப்பப்பட்டு வந்ததற்கு பலன் கிடைத்துள்ளது. தற்போது இத்திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருப்பதுடன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை திமுக சார்பில் வரவேற்கிறேன். இதே போல் விரைவில் காவேரி மேலாண்மை வாரியத்தையும் அமைத்து காவேரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரை மத்திய அரசு துடைத்து, அவர்தம் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications