கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.. சுஷ்மாவுக்கு ஸ்டாலின் கடிதம்
கச்சத்தீவை மீட்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: கச்சத்தீவை மீட்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவை மீட்பதே மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்று முன்தினம் இரவு இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த 22 வயதான பிரிட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழக மீனவர் கெல்லப்பட்டது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ம் பிரதமர் மோடியும் இதுவரை வாய்திறக்கவில்லை.

சுஷ்மாவுக்கு கடிதம்
இந்நிலையில் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இலங்கை தூதரை அழைத்து இந்திய அரசின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர் கொல்லப்படுவதை இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூற வேண்டும்.

இலங்கையை எச்சரிக்க வேண்டும்
மீனவர் தாக்கப்பட்டால் இலங்கை கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க வேண்டும். இந்திய கடற்படை, கடலோர காவல்படையும் இருந்த போதிலும் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்
இலங்கை கடற்படையால் மீனவர் கொல்லப்படும் கொடூரத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications