மதுரவாயல் மேம்பால திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சென்னை துறைமுக வளர்ச்சிக்கு உதவும் மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை, 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.1,816 கோடி செலவில் மேம்பாலச் சாலை அமைக்க திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அழைத்து அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 20 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன.

சாலைப் பணிகளால் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், கூவத்தில் துாண்கள் அமைக்கப்படுவதாக கூறி, 2012 மார்ச் 29ல், தமிழக அரசு தடை விதித்தது. அடுத்த நாள் முதல் பணிகள் முடங்கின.
அப்போதைய பிரதமரின் ஆலோசகர், நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்தடுத்து வந்து, முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து, சாலை பணியை தொடர, பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.
இது தொடர்பான வழக்கில், 'தடையின்றி பணிகளைத் தொடரலாம்; மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்காத மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஓராண்டுக்கு மேலாக விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில் சென்னை துறை முகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் "துறைமுகத்துக்கு வரும் சரக்கு வாகனங்களுக்கு மதுரவாயல் மேம்பால திட்டம் மிகுந்த பலனளிக்க கூடியது. எனவே, அந்த சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications